கிடப்பில் போடப்பட்ட போலீஸ் பூத் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:தமிழக - ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்ட போலீஸ் பூத் கிடப்பில் போடப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியில், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அங்கிருந்து பிரியும் ஏடூர் கிராம சாலை வழியாக, ஆந்திரா செல்ல வழி உள்ளது. தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை தவிர்த்து, ஏடூர் சாலை வழியாக சென்றுவர வாய்ப்புள்ளது. அதை தடுக்கும் வகையில், சோதனைச்சாவடி திறந்த போதே, ஏடூர் சாலை நுழைவாயிலில், போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் முன்பு வரை, போலீஸ் பூத் பயன்பாட்டில் இருந்து வந்தது. அதில், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்து வந்தனர். அதன்பின், போலீஸ் பூத் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, கடத்தல் சம்பவங்கள் நடப்பதை தடுக்க, மீண்டும் அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய போலீஸ் பூத் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதில், சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.