எலவம்பேடு பொது குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற கோரிக்கை
பொன்னேரி:பொன்னேரி அடுத்த எலவம்பேடு கிராமத்தில் உள்ள ஊர்பொதுக்குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், கரையோரங்களில் முள்செடிகள் வளர்ந்தும் உள்ளன.மழைக்காலங்களில் இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், கிராமவாசிகளின் பல்வேறு தேவைகளுக்குபயன்பட்டு வந்தது.ஆண்டு முழுதும் வற்றாத குளமாக இருப்பதால், கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி இருந்தது.தற்போது குளத்தில் தண்ணீர் இருந்தும், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகாயத்தாமரை நிறைந்து காணப்படுவதால் குளம் பாழாகி வருகிறது. இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:இதுபோன்ற நீர்நிலைகளை பராமரிப்பதில் அரசு மெத்தனமாகவே இருக்கிறது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கால்நடைகள் குடிநீருக்காக தவிக்கின்றன.கிராமவாசிகள் மற்றும் கால்நடைகள் பயன்பெறும் வகையில், குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.