உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கண்ணதாசன் நகரில் தேங்கிய மழைநீர் குடியிருப்புவாசிகள் அகற்றினர்

கண்ணதாசன் நகரில் தேங்கிய மழைநீர் குடியிருப்புவாசிகள் அகற்றினர்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கண்ணதாசன் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வளர்ந்து வரும் இப்பகுதியில் கால்வாய், சாலை வசதி இல்லாமல் பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்ததில், 18 லட்ச ரூபாயில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. முறையாக கால்வாய் பணி நடக்காததால், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான வகையில் பணிகள் நடக்க உத்தரவிட்டதின் பேரில் பணிகள் நடந்தது.கால்வாய் பணியின் போது சாலை பெருமளவு சேதம் அடைந்தது. இதனால் குண்டும், குழியுமாகவும், சில இடங்களில் மண் சாலையாகவும் மாறி உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், மழைநீர் இந்த பள்ளங்களில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் இருந்து மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் நடந்து செல்லும்போது, அவ்வழியே வாகனங்கள் சென்றால் மழைநீர் தெறித்து உடைகள் சேறாகி விடுகின்றன.நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்தது. இதில் கண்ணதாசன் நகரில் உள்ள சாலை பள்ளங்களில் மழைநீர் சேர்ந்து குளம்போல் காட்சியளித்தது. தேங்கியுள்ள நீரை அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கண்ணதாசன் நகருக்கு சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !