பள்ளி எதிரே சாலை சேதம்
திருவாலங்காடு:அரசு பள்ளி எதிரே உள்ள சாலை சேதமடைந்து, பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் உள்ள பஜார் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி முன், 20 மீ.,க்கு சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சமீபத்திய மழையால், பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.