கும்மிடியில் புதிய பஸ் நிலையம் ரூ.7.29 கோடி நிதி ஒதுக்கீடு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், 1.80 ஏக்கர் நிலப்பரப்பில், 7.29 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பேருந்து நிலையத்தில் இட நெருக்கடி போன்ற காரணங்களால், பெரும்பாலான தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள், கும்மிடிப்பூண்டி நகருக்குள் சென்று வருவதை தவிர்த்து வருகின்றன. அந்த பேருந்துகள், புறவழிச்சாலை வழியாக சென்று வருவதால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், பெத்திக்குப்பம் பகுதியில், சர்வே எண்: 173/1ஏ1ல், 1.80 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை, மூன்று மாதங்களுக்கு முன், போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 7.29 கோடி ரூபாய் செலவில், அந்த இடத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான டெண்டர் அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில், சுற்றுச்சுவருடன் ஒரே நேரத்தில், 17 பேருந்துகள் நிற்கும் வசதி, காத்திருப்போர் அறைகள், நேர காப்பாளர் அறை, உதவி மையம், 17 கடைகள் கொண்ட வணிக வளாகம், டூ - வீலர், ஆட்டோ மற்றும் கார்களுக்கான தனி பார்க்கிங் வசதி, பெண்கள் பாலுாட்டும் அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. விரைவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை, 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.