13 விவசாயிகளுக்கு ரூ.9.14 லட்சம் உதவி
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 13 விவசாயிகளுக்கு 9.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இருவருக்கு மானிய விலையில் 100 நிலக்கடலை, ஒருவருக்கு பண்ணை குட்டை அமைக்க 75,000 ரூபாய் மானியம், கூட்டுறவு துறை சார்பில், 10 பேருக்கு 8.11 லட்சம் மதிப்பிலான பயிர் கடனுக்கான ஆணை என, 13 பேருக்கு 9.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர்-பொறுப்பு பால்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்-வேளாண்மை வேதவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.