கால்வாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
பொன்னேரி:கால்வாயில் குளிக்க சென்ற பள்ளி மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் மகன் சபரி, 12. இவர், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி நண்பர்களுடன், அதே பகுதியில் உள்ள கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது, நீண்ட நேரமாகியும் சபரி வெளியில் வரவில்லை. தகவல் அறிந்து வந்த கிராம மக்கள், சபரியை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சபரி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.