கெட்டுப்போன கோழி இறைச்சி பிரியாணி உணவகத்திற்கு ‛சீல்
கும்மிடிப்பூண்டி,:சென்னை கொடுங்கையூரை தொடர்ந்து பொன்னேரியில் இயங்கி வரும் எஸ்.எஸ்., பிரியாணி உணவகத்திலும் 16ம் தேதி கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்ட சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.கொடுங்கையூரில் உள்ள பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்டு ‛சீல்' வைத்தது போல பொன்னேரியிலும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், பொன்னேரி எஸ்.எஸ்., பிரியாணி உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். கோழி இறைச்சிகள் கெட்டு போய் நுால் நுாலாக வருவதும், பிரியாணி கெட்டு போனதும், தரமற்ற பன்னீர் இருப்பதும் தெரியவந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறையினர் அந்த உணவகத்தை பூட்டி ‛சீல்' வைத்தனர்.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் கூறுகையில், ''இதுபோன்ற கெட்டு போன கோழி இறைச்சி உணவை உட்கொண்டால் கட்டாயம் வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். தரமற்ற உணவு பொருட்கள் குறித்து போட்டோ, வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற மொபைல்போன் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.