மழைநீருடன் கழிவுநீர் கலப்பு ஊத்துக்கோட்டையில் சீர்கேடு
ஊத்துக்கோட்டை:சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால், ஊத்துக்கோட்டையில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் சாலை போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு, வீடுகள், வணிக வளாகங்கள், வங்கி, டி.எஸ்.பி., அலுவலகம், திரையரங்குகள் உள்ளிட்டவை உள்ளன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் கனரக வாகனங்கள், இச்சாலை வழியாக சென்று வருகின்றன. பாதசாரிகள், வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையில், கழிவுநீர் கால்வாயை முறையாக பராமரிப்பது இல்லை. ஊத்துக்கோட்டை பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இக்கால்வாயில் இருந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம், கால்வாய்களை சீரமைக்காததால் கழிவுநீர் வெளியேறும் நிலையில், 10க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் வைத்து, டெங்கு நோய் குறித்த கணக்கெடுப்பை நடத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய்கள் துார்வாரப்பட்டது. கால்வாய் துார்வாரியும் கழிவுநீர் வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.