கழிவுநீர் அகற்றுவோர் குழு காப்பீடு எடுக்க அறிவுரை
திருவள்ளூர்: கழிவுநீர் அகற்றும் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு, குழு காப்பீடு எடுக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். திருவள்ளூர் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், கமிஷனர் தாமோதரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி மற்றும் அருகில் உள்ள கிராம ஊராட்சிகளில் உள்ள கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கமிஷனர் மற்றும் சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது: வீடுகளில் கழிவுநீர் எடுப்பதற்கு, பதிவு செய்த லாரிகள் மட்டுமே செயல்பட வேண்டும். மாதந்தோறும், 10 நாட்களுக்கு ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதற்கான நகலை, ஈக்காடு கழிவுநீர் உந்து நிலையத்தில் ஒப்படைத்து, பதிவு செய்ய வேண்டும். கழிவுநீர் எடுக்கும் போது, உரிய பாதுகாப்பு முறையை கையாள வேண்டும். மேலும், கழிவுநீர் அகற்றும் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு, குழு காப்பீடு செய்து, அதன் நகலை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.