வட்டாட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தஞ்சம்?
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, வாரச்சந்தை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர்கள் சிலர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.சந்தையில் கடை வைக்க வந்தவர்கள், நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டனர். இதனால், வியாபாரிகள் போதிய இடவசதி இன்றி தவித்து வந்தனர். நேற்று பேரூராட்சி அதிகாரிகள், நரிக்குறவர்களை சந்தை வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்ட நரிக்குறவர்கள், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தவர்களிடம், வட்டாட்சியர் சிவகுமார் பேச்சு நடத்தினார்.தற்காலிகமாக, சந்தை வளாகத்தில் தங்கி இருக்கும்படி கூறி, அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.