வடமாநிலத்தவரை தாக்கிய 3 சிறுவர் உட்பட ஆறு பேர் கைது
மப்பேடு:அரசு பள்ளியில் கட்டட பணி செய்து வந்த வடமாநிலத்தவர்கள் ஏழு பேரை ஆபாசமாக பேசி, தாக்கிய மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேரை, மப்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன், 44. இவர், கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டட பணிகள் மேற்கொண்டு வருகிறார். இவரிடம், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுஜன், 24, மிலன்சாய், 27, அப்துல் ரகுமான், 28, சோனிதாஸ், 22, சிரஜில், 18, தமின், 18, ஜலால், 32, ஆகிய ஏழு பேர் கட்டட பணி செய்து வந்தனர். கடந்த 15ம் தேதி இரவு அரசு பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், வடமாநிலத்தவரிடம் ஆபாசமாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். படுகாயமடைந்த வடமாநிலத்தவர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், சொந்த ஊருக்கு சென்றனர். நேற்று முன்தினம் கமலநாதன் அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், குமாரசேரியைச் சேர்ந்த நாகசக்தி, 18, பாலாஜி, 24, நாகராஜ், 19, மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேரை மப்பேடு போலீசார் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மூன்று சிறுவர்களை சொந்த ஜாமினில் விடுவித்தனர்.