எளாவூரில் டெங்கு சிறப்பு முகாம்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் கிராமத்தைச் சேர்ந்த, 21 வயது கர்ப்பிணி ஒருவருக்கு, 'டெங்கு' காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, எளாவூர் கிராமத்தில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, நோய் பரவல் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடந்தன.வருவாய் துறையினர் மற்றும் சுகாதார துறையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு முகாமில், ஏராளமான கிராமத்தினர் பங்கேற்றனர். கிராமம் முழுதும், கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டது.கொசுக்களின் வகைகள், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள், அவற்றை அழிக்கும் முறைகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் குறித்தும், காய்ச்சல் நீடித்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் சுகாதார துறையினர் விளக்கி கூறினர்.