உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

 டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

மீஞ்சூர்: மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், எல்.பி.ஜி., டேங்கர் லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், இந்தியன் ஆயில் எல்.பி.ஜி., முனையத்தில் இருந்து தழிகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 'பாட்டலிங் பாயிண்ட்' களுக்கு டேங்கர் லாரிகள் மூலம், சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு டேங்கர் லாரியும், 20,000 கிலோ கொள்ளளவு கொண்டவை. நேற்று காலை, ஆந்திர மாநிலம் கடப்பா பகுதிக்கு, சமையல் எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி முனையத்தில் இருந்து புறப்பட்டது. தென்காசியை சேர்ந்த முருகன், 35, ஓட்டினார். அத்திப்பட்டு புதுநகரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் திரும்பியது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்தனர். காயம் அடைந்த முருகனை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டன. பின் கிரேன்கள் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி மீட்கப்பட்டது. இச்சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பையும், போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ