ஆகாய தாமரை, குப்பை கழிவால் நாசமாகி வரும் கால்வாய்
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளட்டீ கிராமத்தில் துவங்கும் கால்வாய், புதுப்பேடு, கே.ஆர்.பாளையம், மவுத்தம்பேடு ஆகிய கிராமங்கள் வழியாக பயணித்து, பகிங்ஹாம் கால்வாயில் முடிகிறது.இந்த கால்வாய் முறையான பராமரிப்பு இன்றி கிடக்கிறது. கால்வாய் முழுதும் ஆகாயத்தாமரை மற்றும் முள்செடிகள் சூழ்ந்து வளர்ந்துள்ளன. இதனால், கால்வாயில் தேங்கும் தண்ணீரை, அருகே உள்ள கிராமவாசிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும், மழைக்காலங்களில் மீஞ்சூர் பேரூராட்சியின் கழிவுநீர், மழைநீருடன் சேர்ந்து கால்வாயில் கலந்து விடுகிறது. தண்ணீர் இருந்தும் அதில் கழிவுநீர் கலந்துவிடுவதால், கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.எனவே, கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றிவிட்டு, துார்வாரி சீரமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.