ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட மூவர் கைது
திருவள்ளூர், திருவள்ளூரில் அரசு கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு வழங்க, 75,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி தாசில்தார் உட்பட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ஜோசப், 31. இவர், திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில், 'லாஜிஸ்டிக்' கம்பெனி நடத்தி வருகிறார்.எண்ணுார் - மாமல்லபுரம் வரை வெளிவட்ட சாலைக்காக, இவரது கம்பெனியில், 3,850 ச.அடி நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதற்காக, 48 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு தொகை வழங்க நிர்ணயித்தது. இந்த தொகையை பெற ஆஸ்டின் ஜோசப்பிடம், நில எடுப்பு தனி தாசில்தார் எட்வர்ட் வில்சன், 50, என்பவர் 1 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.இதுகுறித்து ஆஸ்டின் ஜோசப், திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார்.போலீசார் அறிவுரையின்படி, தனி தாசில்தார் எட்வர்ட் வில்சனை தொடர்பு கொண்டு, 75,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்.பணத்தை பெற கீழ்நல்லாத்துாரைச் சேர்ந்த கோமதிநாயகம் என்பவரை அனுப்புவதாக அவர் தெரிவித்தார்.இந்த நிலையில், கோமதிநாயகம் அனுப்பி வைத்ததாக வெள்ளதுரை என்பவர், ஆஸ்டின் ஜோசப்பிடம் பணத்தை பெற்றார்.அங்கு, மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவர் கொடுத்த தகவலின்படி, தரகர் கோமதிநாயகம் மற்றும் தனி தாசில்தார் எட்வர்ட் வில்சன் ஆகிய இருவரையும் பிடித்தனர். பின், மூவரையும் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.