பயன்பாடின்றி கழிப்பறை பாழ் ரயில் பயணியர் அவதி
திருவாலங்காடு: திருவாலங்காடு ரயில் நிலையத்தில், பயணியருக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி பாழடைந்து உள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தை, சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை ---- அரக்கோணம் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி, சென்னை, திருவள்ளூர், அம்பத்துார், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணியர் சென்று வருகின்றனர். அதே போல, பெண்கள், மாணவ -- மாணவியரும் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில், முதல் நடைமேடையில், பயணிருக்காக வைக்கப்பட்ட கழிப்பறை நீண்ட நாட்களாக பயன்பாடின்றி பாழடைந்து வருகிறது. இதனால், பயணியர் சிறுநீர் கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். ஆண்கள் பலர், ரயில் நிலையத்தின் அருகே உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிப்பறையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.