பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் பணி செய்த பெண் காவலரை, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் தமிழரசி, 28. இவர் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, 30; மற்றும் ஜெயந்த், 30; ஆகியோர் எஸ்.பி.,யிடம் மனு கொடுத்து விட்டு வந்தனர். பின் நுழைவாயில் பகுதியில் காத்திருந்த பத்திரிகையாளர்களை பார்த்து, அவர்கள் ஆபாசமாக பேசினர். அங்கு பணியிலிருந்த பெண் காவலர் தமிழரசி தட்டி கேட்ட போது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தமிழரசி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.