இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு நெடுஞ்சாலையோர கிராமத்தினரே உஷார்
திருவாலங்காடு, திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில், குடியிருப்புகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதால், அப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம் --- தக்கோலம் நெடுஞ்சாலையை ஒட்டி சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, சின்னகளக்காட்டூர், முத்துக்கொண்டாபுரம் கூர்மவிலாசபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இங்கு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மப்பேடு மற்றும் திருவள்ளூர் நகரைச் சுற்றியுள்ள தொழிற்சாலையில் பணிபுரிய, ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இரவு நேரங்களில் குடியிருப்புகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது. மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஓராண்டில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளன. திருடப்படும் இருசக்கர வாகனங்கள், அரக்கோணம் நகரில் பதுக்கி வைத்து, அதிலுள்ள உதிரிபாகங்களை பிரித்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தால், முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நாட்கள் காவல் நிலையம் அலைந்த பின்னரே, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திருடப்பட்ட வாகனங்களை சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தி, வாகனம் பிடிபட்டால் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே, இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையாக வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.