வீரமங்கலம் நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி மும்மரம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், 'பெஞ்சல்' புயலால் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. மேலும் சோளிங்கர் ஏரியும் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் ஆர்.கே.பேட்டை அடுத்த, வீரமங்கலம் ஏரிக்கும் புயல் மழையால் மழைநீர் வரத்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் கால்வாய் உடையும் அபாயம் இருந்தது. இதையடுத்து, நேற்று, வீரமங்கலம் பொதுமக்கள், நீர்வளத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக நீர்வரத்து கால்வாயை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நீர்வரத்து கால்வாய் உடைப்பு ஏற்பட்டால் விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்தில் தண்ணீர் புகும் அபாய நிலை உள்ளதால், நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.