புதரில் மாயமான வேண்பாக்கம் ஏரி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவில் சிறிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் மழைநீர் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும், அருகே உள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுகிறது.தற்போது பெய்து வரும் மழையால், ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏரி முழுதும் ஆகாயத்தாமரை மற்றும் புதர்கள் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளின் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் குட்டையாகவும் மாறியுள்ளது.பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த ஏரி பராமரிப்பு இன்றி பாழாகி வருகிறது.ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உரிய முறையில் பராமரிக்காவிட்டால், நாளடைவில் ஆக்கிரமிப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.எனவே, நகராட்சி நிர்வாகம் ஏரியை முழுமையாக அளவீடு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.