சாலையில் திரியும் கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம்
திருமழிசை: திருமழிசையில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் நடந்த சிறப்பு வார்டு சபை கூட்டத்தில், சாலையில் உலா வரும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கோசாலையில் ஒப்படைக்கப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமழிசை பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும், மூன்று நாட்களுக்கு சிறப்பு பேரூராட்சி வார்டு சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருமழிசை பேரூராட்சியில் நேற்று இரண்டாவது நாளாக, ஆறு வார்டுகளில் நடந்த வார்டு சபை கூட்டத்தில், அந்தந்த பகுதி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பகுதி மக்கள், குடிநீர், சாலை, கால்வாய் மற்றும் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டுமென மனு அளித்தனர். இதற்கு பதிலளித்த பேரூராட்சி தலைவர் மகாதேவன், ''வரும் காலங்களில் கால்நடைகள் உலா வருவதை தடுக்கும் வகையில், அதன் உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' வழங்கப்படும். அதன்பின்னும், கால்நடைகளை சாலையில் திரியவிட்டால், அவற்றை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் . அதன்பின், அதன் உரிமையாளர்கள் அபாராதம் செலுத்தி, மீட்டுக் கொள்ள வேண்டும்,” என்றார். நேற்று பெறப்பட்ட 18 மனுக்களும், முதல்வரின் முகவரி இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெ ன, பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.