பாண்டரவேடு ஏரியில் ரயில் பாதைக்கு எதிர்ப்பு பாலம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் கெடு
பள்ளிப்பட்டு:திண்டிவனத்தில் இருந்து, பள்ளிப்பட்டு வழியாக, ஆந்திர மாநிலம், நகரி வரை ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பள்ளிப்பட்டு அடுத்த, பாண்டரவேடு கிராமத்தின் மேற்கில் உள்ள ஏரியின் வழியாகவும் ரயில்பாதை அமைக்கப்படுகிறது.இரண்டு நாட்களாக ஏரியில் மண் கொட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்பாதைக்காக ஏரியில் மண் கொட்டப்பட்டு வருவதால், ஏரியின் நீர்பிடிப்பு கொள்ளளவு குறையும், ஏரியின் பரப்பும் குறையும் என்பதால், பாண்டரவேடு கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை, சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு கோட்ட நீர்வளத் துறை பொறியாளர் சுந்தரம், ரயில்பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்.ரயில்பாதையின் குறுக்கே பாலம் அமைத்து பணிகளை மேற்கொள்ளவே நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கு மாறாக, நீர்நிலை பாதிக்கப்படும் விதமாக ரயில்பாதை அமைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.ஏரியில் பாலம் கட்டப்பட்டு, ரயில்பாதை அமைக்க வேண்டும் எனக்கூறி பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.