நீர்த்தேக்க தொட்டி குடிநீர் குழாய் சீரமைப்பு
கண்ணுார், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணுாரில், கடந்த 2004 - 05ம் ஆண்டு கட்டப்பட்ட 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த குடிநீர் தொட்டி, 2015 - 16ம் ஆண்டு ஊரக வளர்ச்சி கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல இடங்களில் சேதமடைந்தும், குழாய் மற்றும் வால்வு பழுடைந்து குடிநீர் வீணாகி வந்தது. மேலும், தொட்டியை சுத்தம் செய்யாமலேயே குடிநீர் வழங்கப்படுவதாகவும், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஒன்றிய அதிகாரிகள் உத்தரவுப்படி, மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியின் குழாய் சீரமைத்து, புதிய வால்வு பொருத்தப்பட்டது.