உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரண்டு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம் அல்லல்படும் தோமூர் கிராம மக்கள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

இரண்டு ஊராட்சியின் கீழ் ஒரு கிராமம் அல்லல்படும் தோமூர் கிராம மக்கள் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

திருவாலங்காடு: தோமூர் கிராமத்தில் இரண்டு தெருக்கள் வெவ்வேறு ஊராட்சியில் வருவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேட்டுப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில், கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு என, இரண்டு தெருக்கள் உள்ளன. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு உட்பட்ட கொள்ளாபுரி அம்மன் கோவில் தெரு சென்றாயன்பாளையம் ஊராட்சியிலும், விநாயகர் கோவில் தெரு தோமூர் ஊராட்சியிலும் வருகிறது. ஒரே கிராமத்தில் உள்ள பக்கத்து பக்கத்து தெரு, இரு வேறு ஊராட்சியில் வருவதால், அப்பகுதியினர் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது: ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டையில், ஒரே கிராமம் இரண்டு ஊராட்சியில் வருவதால், வருவாய் துறையில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது. அதேபோல், கிராமத்தில் பிரச்னை என, காவல் நிலையத்தை தொடர்பு கொண்டால் கனகம்மாசத்திரம், பென்னாலுார்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் எங்கள் எல்லையில் வரவில்லை எனக் கூறுகின்றனர். இதனால், புகாரை எங்கு அளிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். ஊராட்சி அலுவலகம், ஓட்டு போடும் மையம் உள்ளிட்டவை மாறுபடுகிறது. இதனால், கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெறுவதில் ஏகப்பட்ட சிக்கல் உள்ளது. ஊரில் திருவிழா நடத்துவது தொடர்பாக யாரிடம் அனுமதி பெறுவது என, தெரியாமல் குழப்பமடைந்து வருகிறோம். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை