கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து இயக்கப்படுமா?
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட், சிட்கோ, தேர்வாய்கண்டிகை சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கும்மிடிப்பூண்டியில் இருந்து நேரடியாக கோயம்பேடு சென்று, அங்கிருந்து பேருந்து வாயிலாக சொந்த ஊருக்கு சென்று வந்தனர்.தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று, சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதவரம் சென்று, அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல வேண்டும். அதன்பின், பேருந்து வாயிலாக சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.இதனால், மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.