புதிய கால்நடை மருந்தகம் ரூ.65 லட்சத்தில் பணி துவக்கம்
கடம்பத்துார்: கடம்பத்துாரில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. கடம்பத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே, கடந்த 1967ம் ஆண்டு கால்நடை மருந்தகம் திறக்கப்பட்டது. இந்த மருந்தகத்தை, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 50 ஆண்டுகளாக பழமையான இக்கட்டடம் ஆங்காங்கே சேதமடைந்து, மழை நேரங்களில் கட்டடம் முழுதும் மழைநீர் வழிந்தோடியது. இதனால், கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வரும் பகுதிமக்கள், அச்சத்துடன் வந்து செல்வதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கால்நடை துறை சார்பில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடந்து வருகிறது.