உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பீஹார் வாலிபர் அடித்து கொலை தப்ப முயன்ற தொழிலாளர்கள் கைது

பீஹார் வாலிபர் அடித்து கொலை தப்ப முயன்ற தொழிலாளர்கள் கைது

மாதவரம், மாதவரம் மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் உள்ள வீட்டில், இரண்டு ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்கள் ஐந்து பேர் வாடகைக்கு தங்கி, அருகில் உள்ள அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் அங்கு, ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது, தொழிலாளர்களுக்கு வெவ்வேறு விதமான பரிசு பொருள் வழங்கியது தொடர்பாக, நிறுவன மேலாளருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில், வீட்டிற்கு வந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, தொழிலாளர்களுக்கு இடையே, பரிசு பொருள் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நீரலாகுமர், 19, என்பவரை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மற்ற நான்கு பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். பின் பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். இதில், மண்டை உடைந்து, ரத்தம் பீறிட்டுள்ளது. இதனால், பயந்த மற்ற நான்கு பேரும் அங்கிருந்து தலைமறைவாயினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம் போலீசார், நீரலாகுமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு '108' ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. அதேநேரம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் நான்கு பேரும் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு செல்வது பதிவாகி இருந்தது. அங்கு சென்ற போலீசார், ஆந்திராவிற்கு தப்ப முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த சங்காராம், 20, பபித்ரா, 19, திரிநாத், 19 மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி