| ADDED : ஜூலை 24, 2024 11:04 PM
துாத்துக்குடி:துாத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த 7 ம் தேதி முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக சப் கலெக்டர் பிரபு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சந்தன செல்வம், நேசமணி, அலெக்சாண்டர் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களான நேசமணியும், சந்தன செல்வமும் நேற்று திடீரென கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகமும், உயர்கல்வித்துறையும் தலையீட்டு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்இதையடுத்து, சப் கலெக்டர் பிரபு மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு நடத்தப்பட்டது.மாணவர்கள் தரப்பில், இந்திய மாணவர் சங்க மாநில செயலர் அரவிந்த்சாமி பேசினார்.வரும் காலத்தில் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு மாணவர்கள் கட்டுப்படுவோம் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மீண்டும் கல்லுாரிக்குள் அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் தெரிவித்ததால், பிரச்னை தற்போதைக்கு முடிவுக்கு வந்தது.