கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கோரி திடீர் மறியல்
துாத்துக்குடி: கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க கோரி, துாத்துக்குடி மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.விசைப்படகுகள் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு கடலுக்கு சென்று, இரவு 9:00 மணிக்கு கரை திரும்ப வேண்டும் என்ற அரசு உத்தரவு, 1983 முதல் அமலில் உள்ளது. ஆனால், கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கேட்டு, விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 12 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று, 300க்கும் மேற்பட்டோர் மீன்பிடி துறைமுகம் முன் திடீரென திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள், துாத்துக்குடி சார் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.சப் - கலெக்டர் பிரபு, ஏ.எஸ்.பி., மதன், தாசில்தார் முரளிதரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். 'கலெக்டர், மீன்வளத்துறை அமைச்சர் நேரில் வாக்குறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்' என, அவர்கள் கூறினர். கலெக்டர் வாயிலாக அரசுக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.