இலங்கைக்கு கடத்த இருந்த ஐம்பொன் சிலை பறிமுதல்
துாத்துக்குடி; இலங்கைக்கு கடத்த இருந்த ஐம்பொன் விஷ்ணு சிலையை, கியூ பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி யில் இருந்து, இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக, கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணா காலனி என்ற இடத்தில் நின்ற இருவரை பிடித்து விசாரித்து, அவர்களிடம் இருந்த பையில் பார்த்தபோது, 3 கிலோவில், 1.5 அடி உயரம் கொண்ட பழமையான ஐம்பொன் விஷ்ணு சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர். அதை, இலங்கைக்கு கடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. ஏரல் அந்தோணிராஜ், 45, பாலமுருகன், 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சிலை மதிப்பு, 30 லட்சம் ரூபாய்.