மாமனார் அடித்து கொலை: தகராறில் மருமகன் ஆத்திரம்
துாத்துக்குடி: குடும்ப தகராறில் மாமனாரை அடித்து கொலை செய்து தப்பிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி, மட்டக்கடை சுடலைகோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 56; கூலி தொழிலாளி. குடிபோதைக்கு அடிமையான ஆறுமுகம் சில ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்தார். நேற்று முன்தினம் இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஆறுமுகமும், அவரது மருமகன் அஜய், 26, என்பவரும் தனித்தனியே அமர்ந்து மது குடித்தனர். திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் சிவன் கோவில் தேரடி பகுதியில் நின்று கொண்டிருந்த ஆறுமுகத்தின் தலையில் கட்டையால் தாக்கிவிட்டு அஜய் தப்பியோடிவிட்டார். பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். மத்தியபாகம் போலீசார், அஜயை தேடி வருகின்றனர்.