வந்தே பாரத் ரயிலை வரவேற்க போட்டா போட்டி
துாத்துக்குடி:வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு கொடுக்க சென்ற இடத்தில், தங்கள் தலைவர்களால் தான் ரயில் கோவில்பட்டியில் நிற்பதாக கூறி, அ.தி.மு.க., -- பா.ஜ., மற்றும் ம.தி.மு.க.,வினர் மாறிமாறி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி --- சென்னை வந்தே பாரத் ரயில் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்க, பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் அந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது. கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு கொடுக்க அ.தி.மு.க., -- பா.ஜ., -- ம.தி.மு.க.,வினர் போட்டி போட்டு அங்கு திரண்டனர். ரயில் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கு தங்கள் கட்சி தலைமை தான் காரணம் என, மூன்று தரப்பினரும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர்.