பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
துாத்துக்குடி:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தரையில் பாலை கொட்டி கோஷங்களை எழுப்பினர்.உற்பத்தியாளர்கள் கூறியதாவது:மாடுகளை பராமரிக்க அதிகம் செலவாகிறது. பசும்பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 45 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி, 55 ரூபாயாகவும், கொள்முதல் விலையை ஆவின் நிர்ணயம் செய்ய வேண்டும். லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத் தொகையை, சங்க வங்கி கணக்கில் வரவு வைத்து சங்கம் வாயிலாக வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகமே மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செலுத்தி பால் மாடுகளை பாதுகாக்க வேண்டும். ஆவின் நிர்வாகமே கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். ஊட்டச்சத்து கலப்பு தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.