ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்க உறவினர்கள் கலெக்டர்களிடம் மனு
துாத்துக்குடி: ஆப்ரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழர்கள் ஐந்து பேரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர், தென்காசி மற்றும் துாத்துக்குடி கலெக்டர்களிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி வெளிநாட்டினரை கடத்தி பணம் பறித்து வருகின்றன. கடந்த 6ம் தேதி கோப்ரி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும், துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஐந்து பேரை தீவிரவாத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், கடத் தப்பட்டவர்களில் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மூவரின் குடும்பத்தினர், நேற்று கலெக்டர் இளம்பகவத்திடம் நேரில் அளித்த மனு விபரம்: உறவினர்கள் கதறல் துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, கொடியங்குளத்தை சேர்ந்த புதியவன், 52, நாரைக்கிணறு பொன்னுதுரை, 42, கலப்பைபட்டி பேச்சிமுத்து, 42, ஆகியோர் கடந்த மார்ச்சில் குடும்ப சூழ்நிலை காரணமாக, மின்சார டவர் அமைக்கும் பணிக்காக, கொடியங்குளம் மாரியப்பன் என்பவர் மூலம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டிற்கு சென்றனர். கடந்த 6ம் தேதி அவர்கள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப் பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. கடத்தப்பட்ட அனைவரையும் பத்திரமாக மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரமே உள்ளது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கலெக்டரிடம் கதறி அழுதனர். நடவடிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இளம்பகவத், இதுதொடர்பாக மத்திய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். இதே போல, கடத்தப்பட்ட தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இருவரின் உறவினர்கள், அம்மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மாலியில் கடத்தப்பட்ட ஐந்து தமிழர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். நடவடிக்கை எடுத்து வருகிறோம்
மாலியின் பமாகோவில் உள்ள இந்தியத் துாதரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி: ஆயுதம் ஏந்திய குழுவினரால், ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமான சம்பவம். அவர்களை பத்திரமாக மீட்பது தொடர்பாக, மாலி அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.அந்த நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஐந்து பேரையும் மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.