உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆதிச்சநல்லுார் முதுமக்கள் தாழிகள் மழையில் சேதமடையும் அவலம்

ஆதிச்சநல்லுார் முதுமக்கள் தாழிகள் மழையில் சேதமடையும் அவலம்

துாத்துக்குடி : ஆதிச்சநல்லுாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், மழையால் சேதமடையும் அவலம் ஏற்பட்டுள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லுாரில் இந்தியாவிலேயே முதன் முறையாக தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்தன. 2018ல், மத்திய பட்ஜெட்டின்போது ஆதிச்சநல்லுாரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.மத்திய தொல்லியல் துறையின், திருச்சி மண்டலம் சார்பில் அதற்கான பணி துவங்கியது. முதற்கட்டமாக ஆதிச்சநல்லுார் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணி நடந்தது. அப்போது, 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் உட்பட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.'பி சைட்' பகுதியில் நடந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை, அதே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில், 'சைட் மியூசியம்' அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட சைட் மியூசியத்தை, 2023 ஆக., 5ல் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அதன்பின், அகழாய்வு பணியில் 'சி சைட்' எனப்படும் பகுதியில் தான் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.அதனால், அந்த இடத்தில் தற்காலிகமாக மேற்கூரை அமைத்து பணி நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்த பின், தொல்பொருட்களை பாதுகாக்க பயன்பட்ட மேற்கூரை, தற்போது பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. மேற்பகுதி பிளாஸ்டிக் தார்ப்பாய்கள், சுற்றி அமைக்கப்பட்டிருந்த தார்ப்பாய்கள் என, அனைத்தும் சேதமடைந்துள்ளன.சிறு மழை பெய்தாலே தண்ணீர் உள்ளே புகுந்து, முதுமக்கள் தாழிகளில் தண்ணீர் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் அகழாய்வின் போது எடுத்த பானை ஓடுகள் அனைத்தும், மத்திய தொல்லியல் துறை என அச்சிடப்பட்ட ஒரு துணிப்பையில் அடங்கிய பொருட்கள் மழையிலும், வெயிலிலும் சேதமடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது:மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக தற்காலிக மேற்கூரையை அகற்றி, நிரந்தரமாக ஷெட் அமைத்து மக்கள் வருகை தந்து பார்வையிடும் வண்ணம் அமைக்க வேண்டும். கீழடி அகழாய்வு, 2,600 ஆண்டுகள் தான் பழமையானது. ஆனால், ஆதிச்சநல்லுார், 5,000 ஆண்டுகள் பழமையானது என, நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில், வேண்டுமென்றே தமிழரின் நாகரிகத்தை மறைப்பதற்காக இதுபோல் முயற்சிகள் நடந்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மழை காலத்திற்கு முன் தற்காலிக மேற்கூரையை அகற்றி நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை