உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சென்னை பள்ளி மாணவர்கள் மூவர் துாத்துக்குடியில் மீட்பு

சென்னை பள்ளி மாணவர்கள் மூவர் துாத்துக்குடியில் மீட்பு

துாத்துக்குடி: சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் மூவர், துாத்துக்குடிக்கு ரயிலில் சென்ற நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை, திருமுல்லைவாயில், சத்யா நகரைச் சேர்ந்த ராமதாஸ் மகன் சுதீக்சன், 15, மோகன சுந்தரம் மகன் முகேஸ்வரன், 15, சதீஷ்குமார் மகன் சபரீஷ்வரன், 15. இவர்கள் மூவரும், அம்பத்துாரில் உள்ள, 'எக்ஸெல்' என்ற தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கின்றனர். கடந்த ஆக., 4ல், வகுப்பறையில் பாடத்தை கவனிக்காத மாணவர்களை, ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் மாலை, சீருடையை மாற்றிக்கொண்டு மூவரும், ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடிக்கு புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூவரும் ஏறியுள்ளனர். மாணவர்களை காணாத பெற்றோர், அம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், துாத்துக்குடி ரயில் நிலையம் வந்த மாணவர்கள் மூவரும், எங்கு செல்வது என தெரியாமல் தவித்தனர். விசாரித்த போலீசார், மூவரையும் ரயில் நிலைய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, துாத்துக்குடி வந்த பெற்றோரிடம், மாணவர்கள் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !