பீடி தொழிலதிபர் கடத்தல் பா.ஜ., நிர்வாகி, ஐவர் கைது
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், இடையம்பட்டியை சேர்ந்தவர் பீடி கம்பெனி உரிமையாளர் தியாகராஜ், 39'; இளைஞர் காங்., முன்னாள் மாநில செயலர். இவரை, கடந்த 23ம் தேதி, எலவம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே காரில் வந்த எட்டு பேர் கும்பல் கடத்தியது.தியாகராஜின் உறவினர் அரவிந்த் என்பவரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, தியாகராஜை விடுவிக்க, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. கடந்த 23ம் தேதி இரவு, தர்மபுரி ஹவுசிங் போர்டு அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் அரவிந்திடம் 12 லட்சம் ரூபாய் பெற்று, தியாகராஜை விடுவித்தது. அதற்கு மேல் தங்களிடம் பணம் இல்லை என கூறியதை அடுத்து, அவரை அந்த கும்பல் விடுவித்தது.இந்த வழக்கை விசாரித்த கந்திலி போலீசார் நேற்று முன்தினம் இரவு, தியாகராஜின் உறவினரான திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்சாயத்து துணைத் தலைவர் அரவிந்தன், 35, மற்றும் சிவராஜ்பேட்டையை சேர்ந்த, பா.ஜ., வெளிநாடுவாழ் பிரிவு மாவட்ட தலைவர் வீரமணிகண்டன், 33, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.