திருப்பத்துார்:தொழிலாளிகளின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி, அவர்களது பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, 'ஏசி' வாங்கி அதை வெளியில் குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் முகமது அஷ்வாக், 40; இவர், அதே பகுதியை சேர்ந்த தாசிம், 45, என்பவரிடம், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி, சில நாட்களுக்கு முன்பு, ஆதார், பான் கார்டு மற்றும் வங்கி புத்தகம் ஆகியவற்றை வாங்கி சென்றார். அதை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, 'ஏசி'யை வாங்கி, தாசிம்மிடம் கொடுக்காமல், வெளியில் விற்பனை செய்து மோசடி செய்தார். தனியார் நிதி நிறுவனத்தினர், தாசிம்மிடம்,'ஏசி' வாங்க கடன் பெற்ற தவணையை செலுத்த கேட்டபோது, தான் கடன் பெறவில்லை என கூறினார். இது குறித்து, ஆம்பூர் டவுன் போலீசில் தாசிம் புகார் செய்தார். அதன்படி போலீசார், முகமது அஷ்வாக்கிடம் நேற்று விசாரணை நடத்தியதில், தாசிம்மின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி, தனியார் நிதி நிறுவனத்தில், கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், இதேபோன்று, 43 பேரிடம், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக அவர்களிடம் ஆவணங்களை பெற்று, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, 44 'ஏசி'க்களை வாங்கி, அதை வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.