ரேஷன் அரிசி பறிமுதல் செய்த ஆர்.ஐ.,யை தாக்கியவர் கைது
திருப்பத்துார் : ஆம்பூர் அருகே, கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ஆர்.ஐ.,யை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் கிரீன் சிட்டியில் ரேஷன் அரிசியை பதுக்கி, வெளிமாநிலங்களுக்கு கடத்துவதாக வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் நிர்மலா, தனி வருவாய் ஆய்வாளர் திருஞானம் ஆகியோர் அப்பகுதியில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், 130 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை கைப்பற்றினர். அப்போது, ரேஷன் அரிசி பதுக்கிய கார்த்தி, 32, என்பவர் உருட்டுக் கட்டையால் தாக்கியதில், திருஞானம் காயமடைந்தார். ஆம்பூர் டவுன் போலீசார், கார்த்தியை கைது செய்தனர்.