ஷூ கம்பெனியை கண்டித்து போராட்டம்
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, சில மாதங்களாக ஊதியம் வழங்காததால், 30க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து விலகினர்.மேலும், தொழிற்சாலை நிர்வாகத்திடம் சம்பளப் பாக்கியை வழங்குமாறு, அனைத்து தொழிலாளர்களும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் ஊதியம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்தது.நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் முறையிட்டும் உரிய பதில் அளிக்கவில்லை. ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையின் முன் ஒன்றாக திரண்டு முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.வாணியம்பாடி தாலுகா போலீசார், தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பேச்சு நடத்தினர். விரைவில் சம்பளம் வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.