நாயால் ஏரியில் பாய்ந்த ஸ்கூட்டர்; கணவன் கண் முன் மனைவி பலி
ஊத்தங்கரை; நாய் குறுக்கே வந்ததால், ஸ்கூட்டர் ஏரியில் பாய்ந்ததில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழந்தார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஏபா நகரை சேர்ந்தவர் அமானுல்லா, 48. இவரது மனைவி ஷமீம், 30. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வந்திருந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் ஸ்கூட்டரில், வாணியம்பாடிக்கு புறப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பெரிய ஏரிக்கரையின் மீது அவர்கள் வந்து கொண்டிருந்த போது, நாய் குறுக்கே வந்ததால், அமானுல்லா நிலைதடுமாறியதில், ஸ்கூட்டர் ஏரியில் பாய்ந்து தம்பதி நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் அமானுல்லாவை காப்பாற்றினர். ஷமீம் நீரில் மூழ்கினார். சிங்காரப்பேட்டை போலீசார், ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி, ஷமீமை சடலமாக மீட்டனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.