லட்சம் கோடி இலக்கு நோக்கி அதிவேகப் பயணம்!
திருப்பூர் : திருப்பூரின் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில் தொண்ணுாறு சதவீதம், சிறு, குறு தொழில் நிறுவனங்களாக உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான திட்டங்களை, தொழில்துறையினர் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால், ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை நோக்கிய திருப்பூரின் பயணம் வேகம் பெற்றுள்ளது.இயந்திர முதலீடு மற்றும் ஆண்டு வர்த்தக அடிப்படையில், மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துகிறது. ஒரு கோடி ரூபாய் வரை முதலீடும், 5 கோடி ரூபாய் வரை ஆண்டு வர்த்தகமும் உள்ள நிறுவனங்கள், குறு நிறுவனங்கள்; 10 கோடி ரூபாய் வரை முதலீடும், 50 கோடி ரூபாய்க்குள் வர்த்தகமும் உள்ளவை, சிறு நிறுவனங்கள்; 50 கோடி ரூபாய் வரை முதலீடும், 250 கோடி ரூபாய் வரை வர்த்தகமும் மேற்கொள்பவை, நடுத்தர நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு திட்டங்கள்
மத்திய, மாநில அரசுகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. புதிதாக தொழில்துவங்குவதற்கான முதலீடுகளுக்கு மானியம், வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் வசதி, நிறுவன மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மானியம். குறு, சிறு நிறுவனங்களின் தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி, செலவினங்களை சுருக்கி உற்பத்தியை பெருக்கும் 'லீன்' யுத்திகளை புகுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், பெண் தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க மானியங்கள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. சாதனைப் பயணத்தில் திருப்பூர்
நாட்டின் பின்னலாடை உற்பத்தி தலைநகராக உயர்ந்து நிற்கும் திருப்பூரில், 90 சதவீதத்துக்கு மேல் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே உள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைக்கான ஆடை தயாரிப்புக்கு, குறு, சிறு, நடுத்தர நிலையில் உள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்களே பலம் சேர்த்துவருகின்றன.பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும்கூட, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், சோதனைகளை கடந்து, சாதனையை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகின்றன.சில ஆண்டுகளாக, மத்திய, மாநில அரசுகளின் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான திட்டங்களை திருப்பூர் திறம்பட பயன்படுத்த துவங்கியுள்ளது. இதனால், ஆண்டுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு பின்னலாடை வர்த்தகம் என்கிற இலக்கை நோக்கிய பயணம் வேகம்பெற்றுள்ளது.அடுத்தடுத்த வளர்ச்சி நோக்கி...லகு உத்யோக் பாரதி அகில இந்திய இணை பொதுச் செயலாளர் மோகனசுந்தரம்:மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, துாத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில், பெஷிலிடேஷன் சென்டர்கள்(வசதி மையங்கள்) இயங்குகின்றன. அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு தேவையான அம்சங்களை ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்கின்றன.குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், ஏதேனும் ஒருவழியில் அரசை நெருங்கிச்சென்று, சலுகைகள், திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். குறு நிறுவனங்கள், சிறு நிறுவனங்களாகவும்; சிறு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாக என அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை அடையவேண்டும்.