| ADDED : ஜூலை 06, 2024 10:53 PM
திருப்பூர்:திருப்பூர் அருகேயுள்ள கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சமீபத்தில் தனியார் நிறுவனங்களின் விளம்பர பேனர்கள் அதிகளவில் அமைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.இப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள், ஊர்ப் பெயர்ப் பலகைகள், போக்குவரத்து எச்சரிக்கை பலகைகள் என இந்த விளம்பர பேனர்களுக்கு எதுவும் தப்பவில்லை. வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்கும் வகையில் இவை உள்ளன. வளைவுப் பகுதி என்ற எச்சரிக்கை பலகையைக் கவனித்து வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கும் வகையில் வைத்துள்ள அறிவிப்பு பலகைகளில் கூட விளம்பர பேனர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.நெடுஞ்சாலைத் துறை, மின் வாரியம், ஊராட்சி நிர்வாகம் ஆகியன இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான வகையில் அமைந்துள்ள இது போன்ற விளம்பர பேனர்களை அகற்றுவதோடு, மீண்டும் இதுபோல் வரம்பு மீறாத வகையில் உரிய நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.---.