உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களை தெறிக்க விடும் ஏர்ஹாரன்கள்; நடவடிக்கை இல்லாததால் அதிகரிப்பு

மக்களை தெறிக்க விடும் ஏர்ஹாரன்கள்; நடவடிக்கை இல்லாததால் அதிகரிப்பு

உடுமலை; வாகனங்களில், 'ஏர் ஹாரன்'களை பொருத்தி, அதிக ஒலி எழுப்பி, நகர, போக்குவரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.இத்தகைய நெரிசல் மிகுந்த போக்குவரத்தில், சில வாகன ஓட்டுநர்களின் செயல், பதட்டத்தையும், விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன.அதில், 'ஏர் ஹாரன்' எனப்படும், அதிக ஒலி எழுப்பும், ஒலிப்பான்களை ஒலிக்க விட்டு, போக்குவரத்தில் பதட்டம் ஏற்படுத்துகின்றனர்.குறிப்பாக இளைஞர்கள், விலங்குகளின் சத்தம், சினிமா பாடல் இசையை கொண்ட ஒலிப்பான்களை, அனைத்து இடங்களிலும் தொடர்ந்து ஒலிக்கச்செய்கின்றனர்.திடீரென எழும் அதிக சத்தம் காரணமாக, ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டுநர்களும், ரோட்டோரத்தில் நடந்து செல்பவர்களும், பதறி கீழே விழும் அளவுக்கு, இந்த ஒலிச்சத்தம் இருக்கிறது.மருத்துவமனைகள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதியிலும், இந்த விதிமீறலை, விடுவதில்லை. சில தனியார் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்களிலும், இத்தகைய 'ஏர் ஹாரன்'கள் பொருத்தப்பட்டுள்ளன.மோட்டார் வாகன சட்டத்தின்படி, 70 'டெசிபல்' அளவுக்கு, ஒலி எழுப்பும், ஒலிப்பான்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து துறையினர் இது குறித்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும், இத்தகைய 'ஏர்ஹாரன்'களை வாகனங்களில் மாட்டுவது தொடர்கதையாக உள்ளது.இதே போல், அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை மாட்டி, சத்தம் எழுப்புவதும் அதிகரித்துள்ளது. வட்டார போக்குவரத்து துறையினர் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ