ஆபத்தான அரசு கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த தீர்மானம்
உடுமலை;உடுமலை ஒன்றியத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டடங்களை அப்புறப்படுத்த, ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலை ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணியம், ப்யூலா எப்சிபாய் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சேதமடைந்த கழிப்பறை, கொடிங்கியம் ஊராட்சி வல்லகுண்டாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி கட்டடம், தேவனுார்புதுார் ஊராட்சி மயிலாடும்பாறை கிராம அரசு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.அதேபோன்று, இந்திராநகர் அரசு துவக்கப்பள்ளி சமையல்கூடம், பெண்கள் கழிப்பறை மற்றும் மேல்நிலைத் தொட்டி உட்பட கிராமப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம் உட்பட, மொத்தம், 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுத்துறை அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.