திருப்பூர்;பள்ளிகளில் கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சந்தையில் காய்கறிகள் விற்பனை மந்தமாகியுள்ளதாக, உழவர் சந்தை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த, 23ம் தேதியுடன் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்தன. பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள் விற்பனை மந்தமாகியுள்ளது. வழக்கமாக விற்பனையாவது விட, குறைந்தளவே விற்பனையாவதாக காய்கறி வியாபாரிகள், மளிகைக்கடை நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.உழவர் சந்தையில் வழக்கமாக ஞாயிறு என்றாலே கூட்டம் அலைமோதும். ஆனால், நேற்று எதிர்பார்த்த கூட்டமில்லை. சந்தையில் காலை, 6:00 மணிக்கு பின்பும் கூட்டம் குறைவாகவே இருந்தது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், ''மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பவர், மளிகை கடைகளுக்கு காய்களை வாங்க, வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை, குட்டீஸ் வீடுகளில் தான் இருக்க போகிறார்கள் என்பதால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு சுறுசுறுப்பாக தயாராவதில்லை.இதனால், மளிகை கடைகளுக்கு காலை நேர பரபரப்புடன் சென்று காய்கறி வாங்கி, சாப்பாடு செய்வது குறைந்துள்ளது. விற்பனை குறைவாக இருப்பதால், எங்களிடம் இருந்து அதிகளவில் காய்கறிகளை சில்லறை வியாபாரிகள், மளிகை கடை நடத்துபவர் வாங்கி செல்வதில்லை. விற்பனை ஒரு வாரமாக மந்தமாகவே உள்ளது. இதனால் தான் பலரும் காய்கறிகளை வாங்க வரவில்லை,' என்றனர்.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், தக்காளி, கத்தரி, பீன்ஸ் உட்பட காய்கறி வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவால் விலை கிடுகிடுவென உயர வேண்டும்.ஆனால், சந்தையில் விற்பனை மந்தமாக உள்ளதால், காய்கறிகளை வாங்கி சமையலறையில் குவிக்க பலர் விரும்பாததால், காய்கறி விலை உயராமல், ஓரளவு கட்டுக்குள் உள்ளது. அதே நேரம், தொடர்ந்து வரத்து குறைந்து வந்தால், விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர், விவசாயிகள்.