ஆண்டிபாளையம் குளக்கரையில் பனை காக்கும் நண்பர்கள் சேவை
திருப்பூர்:திருப்பூர், ஆண்டிபாளையம் குளக்கரையை சுற்றிலும், பனை விதைகள் நடப்பட்டது. குளத்தை துார்வாரி சுத்தம் செய்ததும், நிலத்தடி நீர்மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, பனைவிதைகள் நடப்பட்டன.குளக்கரையில் நட்ட விதைகள் முளைத்து, பனைமரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர், நேற்று பனை மரங்களை பராமரித்தனர். சீமைக்கருவேல முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பனைமரத்துக்கு கவாத்து செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.''குளக்கரைகளில், மரக்கன்று நட்டு வளர்க்கலாம்; குறிப்பாக, பனை மரம் வளர்ப்பது அதிகபட்ச பயன்களை அளிக்கும். தரையில் உள்ள தண்ணீரை வேகமாக நிலத்தடி நீர் மட்டமாக கொண்டு சேர்க்கும். நிலத்தடிநீரை பாதுகாக்கும் அரணாக பனை மரம் விளங்குகிறது'' என பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்தனர். *ஆண்டிபாளையம் குளக்கரையில் உள்ள பனை மரங்கள் பராமரிப்பு பணியை, 'பனை காக்கும் நண்பர்கள்' அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.