நீரில் கரையும் உரங்கள் பயன்பாடு காய்கறி சாகுபடிக்கு அதிகரிப்பு
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டுமுழுவதும் பல்வேறு வகையான காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. காய்கறி விளைச்சலுக்கு, செடிகளுக்கு, முறையாக உர மேலாண்மை செய்வது அவசியமாகும்.நீர் சிக்கனத்துக்கும், தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்கவும், பெரும்பாலான விவசாயிகள், சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசன முறைக்கு மாறியுள்ளனர்.இந்த பாசன முறையில், செடிகளுக்கு, நீரில் கரையும் உரங்களே பயன்படுத்தப்படுகிறது. இதனால், உரம் வீணாவது தவிர்க்கப்படுவதுடன், தொழிலாளர்கள் தேவையும் இல்லை.இந்நிலையில், நேரடி பாசன முறையை பின்பற்றும் விவசாயிகளும், தற்போது, நீரில் கரையும் உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். பீட்ரூட் உட்பட சாகுபடிகளில், பிளாஸ்டிக் டிரம்களில், உரங்களை ஊற வைத்து, செடிகளுக்கு, தண்ணீர் பாய்ச்சும் போது, கலந்து விடுகின்றனர். பெரும்பாலானவர்கள் தனியாக 'வென்சுரி' எனும் கட்டமைப்பை ஏற்படுத்தி, நீரில் கரையும் உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'சாகுபடி பரப்புக்கு ஏற்ப, உரங்களை 'டிரம்'மில் ஊற வைத்து, தண்ணீர் பாய்ச்சும் போது, கலப்பதால், அதிகளவு நன்மைகள் கிடைக்கிறது. தொழிலாளர்கள் தேவை இல்லாத இந்த தொழில்நுட்பத்தில், செடிகளுக்கு உரம் தண்ணீர் வாயிலாக கிடைப்பதால், அவை செழித்து வளர்கின்றன,'என்றனர்.