மகளிர் குழுக்களுக்கு ரூ.63.23 கோடி கடனுதவி
திருப்பூர்: திருப்பூரில் நடந்த விழாவில், மகளிர் குழு உதவி குழுக்களுக்கு, 63.23 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாமிநாதன், மாவட்டத்தை சேர்ந்த, 601 மகளிர் குழுவினருக்கு, 63.23 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.மாவட்டத்தில், ஊரக பகுதிகளை சேர்ந்த, 440 மகளிர் குழுக்களுக்கு, 49.44 கோடி ரூபாய்; நகர்ப்பகுதியை சேர்ந்த, 161 குழுக்களுக்கு, 13.79 கோடி ரூபாய் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில், ஊராட்சி அளவில் சிறப்பாக செயல்பட்ட ஏழு மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு, மணிமேகலை விருதுகளை, அமைச்சர் சாமிநாதன் வழங்கி கவுரவித்தார்.